×

வருசநாடு அருகே சின்னசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

வருசநாடு: தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேவிஸ், கோம்பைத்தொழு மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மேகமலை சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேகமலை - கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சின்னசுருளி அருவிருக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த அருவியானது மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அருவிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. இதற்கிடையே இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே அடுத்து வரும் விடுமுறை நாட்களில் சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chinnasuruli Falls ,Varusanadu , Varusanadu, Chinnasuruli Falls, Nevarathu, tourists delight
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்