×

புளியந்தோப்பு சரகத்தில் 176 விநாயகர் சிலைகளுக்கு 200 போலீசார் பாதுகாப்பு

பெரம்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புளியந்தோப்பு சரகத்தில் வைக்கப்பட்டுள்ள 176 விநாயகர் சிலைகளுக்கு 200 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி இந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் என பலரும் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை வைத்துள்ளனர். அந்த வகையில் வட சென்னைக்கு உட்பட்ட புளியந்தோப்பு சரகத்தில் ஆண்டுதோறும் அதிகமாக விநாயகர் சிலைகளை வைப்பது வழக்கம்.

அதன்படி இந்த வருடம் இந்து அமைப்புகள், குடியிருப்பு வாசிகள் சார்பில் என மொத்தம் 176 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களை உள்ளடக்கிய புளியந்தோப்பு சரகத்தில் 72 விநாயகர் சிலைகள், செம்பியம், திருவிக நகர், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களை உள்ளடக்கிய செம்பியம் சரகத்தில் 30 விநாயகர் சிலைகள், கொடுங்கையூர், எம்.கே.பி நகர் காவல் நிலையங்களை உள்ளடக்கிய எம்.கே.பி நகர் சரகத்தில் 74 விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விநாயகர் சிலைகளுக்கு நேற்று புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் நேரில் சென்று விநாயகர் சிலைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த பணிகளை பார்வையிட்டார். மேலும் உதவி கமிஷனர்கள் அழகேசன், தமிழ்வாணன், செம்பேடு பாபு தலைமையில் 200 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணை கமிஷனர் ரம்யா பாரதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்த வகையில் ஏற்கனவே அவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், ஊர்வலத்தின்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாது எனவும் உத்தரவாதம் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Pleyanthopp Saragar , Puliantoppu, Ganesha idol, 200 policemen for security
× RELATED வேலூர் நீர்த்தேக்கங்கள் மூலம்...