×

மூளைச்சாவு அடைந்த 1,548 பேரிடம் 9,257 உடல்உறுப்புகள் பெறப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: இதுவரையில் மூளைச்சாவு அடைந்த 1,548 பேரிடம் 9,257 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.    சென்னை ஓமந்தூரார் அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று 10வது அறுவை சிகிச்சை பெற்று, வீடு திரும்ப உள்ளவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் சம்சத்  பேகம், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் விமலா, நோடல் அலுவலர் ஆனந்தகுமார், நிலைய மருத்துவ அலுவலர்  பார்த்தசாரதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:  விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இவர், இந்த மருத்துவமனையில் 10வது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். கடந்த மாதம் உள்நோயாளியாக தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்ததில் இதய தசை மிகவும் வலுவிழந்து உள்ளது கண்டறியப்பட்டது. எனவே, ஆக.17ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 30 வயதுடையவரின் இதயம் தானமாக அவரது உறவினர்களிடம் இருந்து பெறப்பட்டு செல்பவகுமாருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர், தற்போது நன்கு குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தமிழ்நாட்டில் தற்பொழுது 194 மருத்துவமனைகள் பதிவுரிமை பெற்றுள்ளன. இதில் 21 அரசு மருத்துவமனைகள் மற்றும் 174 தனியார் மருத்துவமனைகளும் பதிவு பெற்று மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 126 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மூளைச்சாவு சான்றளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுவரை 1,548 மூளைச்சாவு அடைந்த நபர்களிடமிருந்து 9,257 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், கணையம், சிறுகுடல், கைகள் உள்ளிட்ட மனித உடலின் முக்கியமான உறுப்புகள் 5,642 ஆகும். இதை தவிர தோல், கருவிழி, இதய வால்வுகள், ரத்த நாளங்கள், எலும்புகள், முதுகு தண்டு மற்றும் டிஸ்க் திசு, வயிற்று மடல் ஆகிய உறுப்புகளும் கொடையாக பெறப்பட்டுள்ளன. மூளை இறப்பு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.  இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

Tags : Minister ,M. Subramanian , 9,257 organs have been obtained from 1,548 brain dead people: Minister M. Subramanian informed
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...