சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இனியும் ஓபிஎஸ் பற்றி அநாகரிகமாக பேசினால் உங்களுடைய குழந்தையுடன் அடுத்த பிரஸ்மீட்டில் பேச வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும் என்று பெங்களூரு புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, பெங்களூரு புகழேந்தி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக தலைமை அலுவலகம் எங்கெளுக்கெல்லாம் கோயில் என்று ஜெயக்குமார் சொல்கிறார். அதை காலால் உடைத்ததாக சொல்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் இடம் கோயில் என்றால், அதை ஏன் பூட்டி வைத்தீர்கள். அதே நேரம் தலைமை அலுவலகம் எங்களது தாய் வீடு என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். தாய் வீட்டில் திருடுவார்களா, நீங்கள்தான் எல்லாத்தையும் கொள்ளையடித்து விட்டீர்களே.
ஜெயக்குமாருக்கு, சென்னையில் தாஜ்மஹால் மாதிரி வீடு உள்ளது. எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்ட முடியும், அமைச்சராக இருந்தபோது கொள்ளை அடித்த பணம்தான். எல்லோரும் கொள்ளையடியுங்கள் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி ஏன் வாய்மூடி இருந்து விட்டார். ரூ4,800 கோடி ஊழல் என்று எடப்பாடி மீது வழக்கு உள்ளது.ஜெயக்குமார் மீது அரை நிர்வாணம், ஊழல் வழக்கு உள்ளது. நீயே ஒரு கிரிமினல் குற்றவாளி. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேனியில் போய், ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன் என்றார். இதுபற்றி புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரம் உதயகுமாரை செல்போனில் ஒருவர் திட்டியதாக, தென்காசி இளைஞர் பாசறை மாவட்ட செயலாளரை வீட்டில் போய் போலீஸ் கைது செய்துள்ளது.
ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவோம் என்றபோது ஏன் போலீஸ் இப்படி கைது செய்யவில்லை. எடப்பாடி பேசும்போது, முதல்வரையே தவறான வார்த்தைகளை சொல்லி பேசுகிறார். இதுபற்றி சேலம் எஸ்பியிடம் புகார் கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை.ஜெயலலிதா இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி யார் என்றே மக்களுக்கு தெரியாது. இப்போது பணம் வந்ததால்தான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். ஜெயலலிதா இருக்கும்போது ஒரு குறை கூட ஓபிஎஸ் மீது சொன்னது இல்லை. ஜெயக்குமாரிடம் எத்தனை முறை பதவியை பறித்தார் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயக்குமார் ஒரு காலத்தில் ஓபிஎஸ் காலை பிடித்து மேலே வந்தவர். இனி காலை பிடித்து மேல வரவே முடியாது. ஓபிஎஸ்சை காலில் விழுந்துதான் தலைமை கழகத்துக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் கூட்டி வந்தனர் என்பதை ஜெயக்குமார் மறந்துவிடக்கூடாது.
உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் போன்று, பல எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் வர உள்ளனர். அதை பொறுக்க முடியாமல் ஜெயக்குமார் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் அதிமுகவை நடத்த முடியாது. ஜெயக்குமாருக்கு எச்சரிக்க விரும்புகிறேன், இனியும் ஓபிஎஸ் பற்றி நீங்கள் அநாகரிகமாக பேசினால் உங்களுடைய குழந்தையுடன் அடுத்த பிரஸ்மீட்டில் பேச வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும். இதை ஜெயக்குமாருக்கு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன். மதுசூதனனை தோற்கடித்தவர்தான் இந்த ஜெயக்குமார். ஓபிஎஸ் மீது எந்த குற்றச்சாட்டு இருந்தாலும் ஜெயக்குமார் பேட்டி மூலம் தெரியப்படுத்தலாம். ஆனால், அவர் பற்றி அநாகரிகமாக பேச வேண்டாம். கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக விரைவில் முடிவு வராவிட்டால், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.