சென்னை: பாரிமுனை, மண்ணடி, பூக்கடை, சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஹவாலா பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பூக்கடை கோவிந்தப்பன் நாயக்கன் தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து பூக்கடை போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக பணக்கட்டுகள் இருந்தன.
இதையடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் மண்ணடியை சேர்ந்த அம்ஜத் கான்(26), செங்குன்றம் அடுத்த நாரவாரிக்குப்பத்தை சேர்ந்த சேக் தாவூத்(52) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. இதற்கு உரிய ஆவணம் இல்லை. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, வருமானவரித்துறை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து இரண்டு பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணம் என்று கூறப்படுகிறது.