சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முடிந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது அமைச்சர்கள் கான்வாய் மெரினா காமராஜர் சாலையில் செல்லும்போது, திடீரென வாலிபர் ஒருவர் தன் பைக்கில் அசுர வேகத்தில் கான்வாய் முன்பு பாய்ந்து சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர், இது தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார், பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரை கண்ணகி சிலை அருகே மடக்கி பிடித்தனர்.
அப்போது, அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வாலிபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் ராயப்பேட்டையை சேர்ந்த சுஜய்(20) என தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது, அதிவேகமாக வாகனத்தை இயக்கியது என 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.