கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜிக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமும் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. நிலக்கரி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பாக நேற்று அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், வெள்ளியன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.