சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகையில் ஆயிரம் ஆண்டு பழமையான சிவபெருமான் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து, தனி சன்னதி கொண்டிருக்கும் மகாகாளி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டு திருமணம் பரிகார தலமாக விளங்கக்கூடிய தடுத்தாட்கொண்ட நாயகி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சன்னதிகள், கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டு வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு 2 நாட்கள் பூஜைகள் நடைபெற்றது.
பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 5 மணிக்கு விநாயகர், கொடிமரம், சாமி, அம்பாள், உள்ள கோபுரம் காளி சன்னதி கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், ஆராதனை, மதியம் திருக்கல்யாண உற்சவம், இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரவிச்சந்திர சிவாச்சாரியார், சங்கர் சிவாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.