ரீவா: மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலில் 2,000 பன்றிகள் உயிரிழந்துள்ளன. அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்கா வகை பன்றிக்காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான பன்றிகள் உயிரிழந்தன. மேலும் திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் இந்த பன்றிக்காய்ச்சல் பரவி வந்தது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்திலும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள ரீவா நகரில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 2000க்கும் மேற்பட்ட பன்றிகள் திடீரென உயிரிழந்தன.
இறந்த பன்றிகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வகை பன்றிக்காய்ச்சல் பரவி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிகள் மற்றும் அவற்றின் இறைச்சி விற்பனையை தடைசெய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவைகளை வாகனங்களில் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.