சென்னை: காமன்வெல்த் மக்களவை மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா சென்ற சட்டப்பேரவை தலைவருக்கு வடஅமெரிக்காவில் உள்ள தமிழர்கள் வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் மக்களவை மாநாட்டில் பங்கேற்க வடஅமெரிக்காவுக்கு சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக கலிபோர்னியா மாநிலம், சேக்ரமெண்டோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வருகை தந்திருந்த சட்டப்பேரவை தலைவரை வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் கடந்த 21ம் தேதி சிலிகான் ஆந்திரா பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய தூதர் டி.வி.நாகேந்திர பிரசாத் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் மற்றும் தமிழ் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கனடாவின் ஹாலிபாக்ஸ் நகரில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற 65வது காமன்வெல்த் மக்களவை மாநாட்டில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். மேலும் அப்பாவுக்கு, கடந்த 27ம் தேதி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், பிரான்ஸ் திருவள்ளூவர் கலைக்கூடம் என்ற தமிழர் அமைப்பின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், பிரான்சில் உள்ள இந்திய தூதரக செயலாளர் குல்தீப் சிங் நேகி, பிரான்ஸ் தமிழ் சங்கத்தின் தலைவர் எம்.தசரதனே, பிரான்ஸ் திருவள்ளூவர் கலைக்கூடம் தலைவர் எம்.அண்ணாமலே பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.