திருவொற்றியூர்: விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் 5,050 விநாயகர் சிலை வைக்க காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் செங்குன்றம், மணலி, எண்ணூர் ஆகிய காவல் உதவி ஆணையர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் காவல் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் விநாயகர் சிலைகள் 10அடி உயரம் மட்டுமே இருக்க வேண்டும். காகிதம் மற்றும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலை மட்டும் பயன்படுத்த வேண்டும். ரசாயன கலவை விநாயகர் சிலைகள் இருக்க கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் சிலைகளுக்கு அருகில் இருக்க கூடாது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளையும், விநாயகர் சிலை வைத்து வழிபடும் முறையையும், ஊர்வலங்கள் செல்லும்போது எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஆய்வாளர்கள் சங்கர், சுந்தர், கிளாஸ்டின் டேவிட், சிட்டிபாபு, கொடிராஜ், புவனேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளர்கள், இந்து முன்னணி அமைப்பினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.