சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் பணி நியமனத்துக்காக 17 பாடப் பிரிவுகளுக்கு சான்று சரிபார்ப்பு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், உடற்கல்வி இயக்குனர் கிரேடு-1, கணினி பயிற்றுனர் கிரேடு-1 ஆகிய பணியிடங்களில் நேரடி நியமனங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான கணினி வழித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடக்கின்றன.
தமிழ்வழியில் படித்ததற்கான சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக வரும் 30ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்வழி சான்றுகளை பட்டதாரிகள் பதிவேற்றம் செய்துள்ளனர். அவை தற்போது சரிபார்க்கப்பட்டு 17 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பதவிக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், மனையியல், உயிரி வேதியியல், இந்திய பண்பாடு, உடற்கல்வி, கணினி அறிவியல் பாடங்களில் தகுதியுள்ளவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடக்க உள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கான அழைப்பு கடிதம், ஆளறி சான்று படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். இவற்றை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. பட்டியலிடப்பட்ட நபர்கள், சான்று சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களின் அனைத்து அசல் சான்றுகள், ஆதார் ஆகியவற்றுடன் அதனுடைய சுய கையொப்பமிட்ட நகல்கள், ஆளறி சான்று ஆகியவற்றின் சான்றுகள் கொண்டு வர வேண்டும்.
சான்று சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வராதவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தாலும், அடுத்தகட்ட பணி தெரிவுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். சான்று சரிபார்ப்பு பட்டியல் சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய http://forms.gle/ZUYC2Ud5wxcapDku6 வழியாக 3 நாட்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.