×

திருவண்ணாமலை தனியார் பள்ளியில் யுகேஜி மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும் தனியார் பள்ளியின் தாளாளரான மனைவியையும் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவரது மகள் 4வயது சிறுமி. இவர் சேத்துப்பட்டு அருகே உள்ள கங்கை சூடாமணி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நேற்றுமுன்தினம் மருத்துவமனை நிர்வாகம் சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதன்பேரில், திருவண்ணாமலை சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று பள்ளிக்கு சிறுமியை அழைத்துச்சென்று, பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். அப்போது பள்ளியில் இருந்த புகைப்படத்தை காண்பித்து விசாரித்ததில், பள்ளியின் தாளாளராக இருக்கும் பிரபாவதியின் கணவரான உலகம்பட்டு அரசு பள்ளி ஆசிரியர் காமராஜை காண்பித்துள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதற்கிடையே, நேற்று காலை எஸ்பி கார்த்திகேயன், ஏடிஎஸ்பி ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் ஆகியோர் சிறுமி பயிலும் தனியார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, 300 அதிரடி போலீசார் குவிக்கப்பட்டு, பள்ளியில் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களிடம் எஸ்பி விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து காமராஜை தொடர்பு கொண்டபோது அவர் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து  எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். போக்சோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்ததாக, கைதான அரசு பள்ளி ஆசிரியரின் மனைவியும், பள்ளி தாளாளருமான பிரபாவதியையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், அரசு பள்ளி ஆசிரியர் காமராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : UKG ,Thiruvannamalai , Sexual harassment of UKG student in Thiruvannamalai private school: Govt school teacher arrested along with his wife
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...