தண்டையார்பேட்டை: சென்னை தங்க சாலையில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 72 சதுர அடி இடத்தை பன்சாலி என்பவருக்கு கோயில் நிர்வாகம் வாடகைக்கு கொடுத்தது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி மேல் கூரை அமைத்து ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வந்தார். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் கண்டுகொள்ளாததால் நேற்று அறநிலையத்துறை சென்னை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் திருக்கோயில் செயல் அலுவலர் செல்வி நற்சோனை மற்றும் வருவாய் ஆய்வாளர் காவல்துறையினர் உதவியுடன் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல் கேவர்சந்த் என்பவருக்கு 165 சதுர அடி கடையை கோயில் நிர்வாகம் வாடகைக்கு கடை கொடுத்தது. ஆனால் அவர் மேல் வாடகைக்கு சாந்தி லால் பண்டாரி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார். அவர் ஒப்பந்தம் காலாவதி ஆகியும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்ததால் அந்த கடைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் தங்கசாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.