×

மாற்று இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டம், விஷ்ணுவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை அருகில் விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு நீண்ட காலமாக நிழற்குடை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், விஷ்ணு வாக்கத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த சூழலில் இரண்டு முறை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை அடிப்படையில் நிழற்குடை அமைக்கலாம் என அதிகாரிகள் கடந்த மே மாதம் 18ம் தேதி எழுத்து பூர்வமாக வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். கடந்த மூன்று மாதங்களாக காலம் கடத்திய நிலையில் நேற்று திடீரென நிழற்குடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், வட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலையரசன் ஆகியோர் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அதிகாரிகள் ஒப்புக்கொண்ட இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் காவல்துறையினர் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர். அரசு அதிகாரிகள் ஒப்புக்கொண்ட இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுமென்றும், இல்லையேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : Marxist ,Communist ,Party , Opposition to setting up a bus shelter at an alternative location; Marxist Communist Party demonstration
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...