சென்னை: கொசஸ்தலை ஆற்றில் அணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதை கண்டித்து, வரும் 30ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொசஸ்தலை ஆறு இரு மாநிலங்களுக்கு இடையே பாய்கிறது. அத்தகைய ஆறுகளில் கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் அணைகளை கட்ட முடியாது. சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திர அரசு ஓர் அணை கட்டியுள்ளது. இப்போது மேலும் இரு அணைகள் கட்டப்பட்டால் கொசஸ்தலையாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.
கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுவதை கைவிட வலியுறுத்தியும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளக் கோரியும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் வரும் 30ம் தேதி காலை 11 மணிக்கு மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.