சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று காலையில் 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 4 தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் அளித்தது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.ஸ்டாலினிடம் இன்று காலை 10.30 மணியளவில் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. தமிழ்,ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை சுமார் 500 பக்கங்களை கொண்டதாக கூறப்படுகிறது.