×

வாணியம்பாடியில் தண்டவாளத்தில் திடீர் விரிசலால் ரயில்கள் நிறுத்தம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே நேற்று காலை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வாணியம்பாடி மார்க்கமாக வரக்கூடிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 5க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆம்பூர், விண்ணமங்கலம் மற்றும் வாணியம்பாடி அருகே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கோவை விரைவு ரயில், வாணியம்பாடி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், துரிதமாக செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட ரயில்களை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் உள்ள வேறு ட்ராக்கில் மாற்றி அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை முழுவதுமாக அகற்றி, புதிய தண்டவாளத்தை பொருத்தினர். இதை தொடர்ந்து, ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டது. தண்டவாள விரிசல் காரணமாக கோவை விரைவு ரயில் வாணியம்பாடியில் இருந்து 90 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Tags : Vaniyambadi , Trains stop due to sudden crack in rail at Vaniyambadi
× RELATED போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு...