மதுரை: குளிக்க வந்த சிறுவன் மூழ்கி இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மீன்களும் இறந்தது மிதந்ததால் மதுரை உத்தங்குடி ஊரணி தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதுவரை பயன்படுத்த வேண்டாம் என்ற மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். மதுரை, கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், வடக்குவெளி வீதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்கள் முன்பு தனது நண்பர்கள் 4 பேருடன் உத்தங்குடியில் உள்ள ஊரணியில் குளிக்க வந்தார். 5 பேரும் ஊரணியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது நீச்சல் தெரியாமல் ஊரணி தண்ணீரில் மாணவர் மூழ்கி உயிரிழந்தார். இதற்கிடையே, இந்தக் ஊரணியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் புதூர் போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊரணி பகுதியில் ஆய்வு செய்தனர். தண்ணீரில் விஷம் ஏதும் கலந்துள்ளதா என்பதை அறிய தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதுவரை இந்தக் ஊரணியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தனர்.