×

மாங்காடு அருகே கூலி தொழிலாளி மின்னல் தாக்கி பலி

குன்றத்தூர்: மாங்காடு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி மின்னல் தாக்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன்(எ) கமலக்கண்ணன்(46). கூலி தொழிலாளி. இவர் ஆடுகளை வளர்த்து, அதனை விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று, ஆடுகளை மேய்ச்சலுக்காக தனது வீட்டின் அருகே இருந்த சிக்கராயபுரம் கல்குவாரி பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதில், மழையில் நனையாமல் இருக்க எல்லப்பன், குடை பிடித்தபடி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எல்லப்பன் மீது மின்னல் தாக்கியதில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  பலியானார். இது குறித்து, மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்த எல்லப்பன் உடலை மீட்டு, அதனை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி கூலி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mangadu , Laborer killed by lightning near Mangadu
× RELATED மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை...