சென்னை: தங்கள் குழந்தையை காப்பாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் எங்கள் குல சாமி என சிறுமி டானியாவின் பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். ஸ்ரீபெரும்பத்தூர் அருகே உள்ள சவிதா மருத்துவமனையில் முகசிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி டானியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முக சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது மருத்துவர்கள் அறிவுரைப்படி தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் மாதவரம் திமுக எம்.எல்.ஏ. சுதர்சனம், நேரில் வந்து சிறுமியின் பெற்றோரிடம் உடல்நலம் விசாரித்து 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
டானியாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தமது தொகுதியின் சார்பில் சிறுமிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக சுதர்சனம் எம்.எல்.ஏ. டானியாவின் பெற்றோரிடம் தெரிவித்தார். அப்போது தனது மகளை காப்பாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் கண்ணீர் மல்க பெற்றோர் நன்றியை தெரிவித்தனர். தங்கள் குழந்தையை காப்பாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் எங்கள் குல சாமி என்றும் பெற்றோர் உருக்கமாக தெரிவித்தனர்.