பீளமேடு: கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மின்சார கட்டண உயர்வு பற்றி பரிசீலிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதை உடனே செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அது குறித்து கருத்து கேட்பு கூட்டம் ஏற்கக்கூடியது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் இருந்து இபிஎஸ்சை காப்பாற்ற முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு, ‘‘அவர் முதலில் அமலாக்கத்துறையிடமிருந்து அவரை பாதுகாத்துக் கொள்ளட்டும். என்னுடைய துறையை பொறுத்தவரை எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். ஆனால் கீழ் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்’’ என்று பதில் அளித்தார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர்.