×

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி

பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் தலைமையிலான மகா கூட்டணி அரசு, குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. பீகாரில் பாஜ.வுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன்  கூட்டணி அமைத்து கடந்த 10ம் தேதி மீண்டும் ஆட்சி அமைத்தார். இந்த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது.

இதில், நிதிஷ் அரசு குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. பாஜ எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். 243 உறுப்பினர்கள் கொண்ட  சட்டப்பேரவையில்  பெரும்பான்மைக்கு 122 உறுப்பினர்கள் தேவை. ஆனால்,  ஐக்கிய  ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய  கூட்டணிக்கு 160 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். முன்னதாக, சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பாஜ.வின் விஜய குமார் சின்காவுக்கு எதிராக, ஆளும் கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, நேற்று காலை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஒருவர் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ள பீகார் மேல்சபை தலைவருக்கான தேர்தலில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த தேவேஷ் சந்திர தாக்குர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

Tags : Nitish ,Kumar government , Trust vote, Nitish Kumar, win
× RELATED பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை..!!