செய்யூர்: சூனாம்பேடு பகுதியில் ஒரு ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் சேதமாகியுள்ளது. இக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடத்தை கட்டித் தரும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு ஊராட்சி காலனி பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர். இக்கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், முறையான பராமரிப்பின்றி, தற்போது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே விரிசல்களுடன் இடிந்து விழுந்து நிலையில் சேதமாகியுள்ளது.
இக்கட்டிடத்தின் சிமென்ட் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழைக் காலத்தில் அதன் வழியே கடைக்குள் மழைநீர் ஒழுகி வருகிறது. இதனால் அங்குள்ள உணவுபொருட்கள் உள்பட பல்வேறு ஆவணங்களும் நனைந்து வீணாகி வருகின்றன. இதையடுத்து மக்களுக்கு சரியான உணவு பொருட்களை வழங்க முடியாமல் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடத்தில் நியாயவிலை கடை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். எனினும், இப்பிரச்னை குறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமான ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கு முன், அக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.