×

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன்?: ஐகோர்ட் நீதிபதி கேள்வி

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜாமின் வழங்க வேண்டும் என்று பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர், செயலாளர் மற்றும் 2 ஆசிரியர்கள் என 5 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தாங்கள் எதற்காக கைது செய்யப்பட்டோம் என தெரியவில்லை. மாணவி மரணத்திற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே தங்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே சிபிசிஐடி வசம் அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டிருக்கின்றன. சிசிடிவி கேமரா காட்சிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது பெற்றோர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதால் காவல்துறை விசாரணை முடியும் வரை ஜாமின் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் நிலைப்பாடு என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அச்சமயம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிசிஐடி காவல்துறையினரிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, இன்று வழக்கு விசாரணை வருகின்றது என முன்னரே வழக்கு ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான தகவலை கேட்டு பெற்றிருக்க வேண்டாமா? என்றும், தாளாளர், ஆசிரியர்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கின்றார்களா? என்ற விவரங்களை கேட்டு வரும் வெள்ளிக்கிழமை தெரிவிக்க வேண்டும் என்றும்  காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்டார். கைது செய்ததற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Kaniyamoor ,Kallakurichi , Kallakurichi student, Kaniyamoor private school administrators, arrested, ICourt
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...