கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் நகைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் 3வது நாளாக தொடங்கியது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று முன்தினம் நகைகள் சரிபார்ப்பு மற்றும் மறுஆய்வு பணிகள் தொடங்கியது. இந்துசமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட உதவி ஆணையர் ஜோதி தலைமையில் 3 உதவி ஆணையர்கள் மற்றும் 3 மதிப்பீட்டு வல்லுநர்கள் கொண்ட 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இன்று 3வது நாளாக நகை மதிப்பீட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.
நடராஜர் கோயிலை பொறுத்தவரை கடந்த 1955ம் ஆண்டில் நகைகளின் முதல் மதிப்பீடு என்பது செய்யப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காலகட்டங்களில், அதாவது 1981, 1987 பின்னர் 1995ம் ஆண்டுகளில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகள் நடத்தப்பட்ட நிலையில், கடைசியாக 2005ம் ஆண்டில் இப்பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு 17 ஆண்டுகளாக நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப்பணிகள் நடைபெறவில்லை. 17 ஆண்டுகளில் நடராஜர் கோயிலுக்கு, நடராஜர், சிவகாம சுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான நகைகள் காணிக்கை பொருட்கள் உள்ளிட்டவை வந்துள்ளது. அதுகுறித்த ஆவணங்களை சரிபார்க்க அதிகாரிகள் தொடர்ந்து 3வது நாளாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.