சென்னை: வரிஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரபல தோல் தொழிற்சாலைகளில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். பிரபலமான தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களான பரிதா, கேஎச் குழுமங்களில் இந்த சோதனை தொடர்கிறது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இன்றும் நீடிக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், ராமாபுரம், மன்னடி உள்ளிட்ட இடங்களிலும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நீடிக்கிறது. ஊழியர்களின் சம்பள கணக்குகள், காலனி ஏற்றுமதி மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதி குறித்த கணக்கு ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளன. ஆனால் வருமானத்தை மறைத்து பலகோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. முதல் நாள் சோதனையில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.