காஞ்சிபுரம்: வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பணிகளில், அவரது மைத்துனர் தலைவராக வலம் வருகிறார் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சார்ந்த சுமதி. இவர், தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. வைப்பூர் ஊராட்சிக்கு பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெரு விளக்கு மற்றும் முதியோர் உதவி தொகை தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சுமதியை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். தற்போது, ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சுமதியின் மைத்துனர் சந்தானம், இவருதான் தற்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை நிர்வகித்து வருகிறார். ஏற்கனவே, ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்தானம் என்பவர் தான் ஊராட்சி மன்ற தலைவராக உலா வருகின்றார். ஊராட்சி மன்ற தலைவர் நாற்காலியில் அமர்வது, சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிக்கு, பதிலாக அவருடைய மைத்துனர் சந்தானம் தேசிய கொடி ஏற்றுவதும், கிராம சபை கூட்டம் நடத்துவதும், பொதுமக்கள் கேள்வி கேட்டாள் அடி ஆட்களை வைத்து மிரட்டுவதுமாக இருந்து வருகிறார். வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற சுமதி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தலைவரை சந்திக்க முடியவில்லை. அவர்தான் தலைவரா என வைப்பூர் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வைப்பூர் கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். எங்கள் கிராம வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்று ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அவரின் மைத்துனர் தலைவராக வலம் வருகின்றார். பொதுமக்களின் குறைகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரியபடுத்த முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட கலெக்டர் தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.