×

பல்லாவரம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்

பல்லாவரம்: பல்லாவரம் ரயில் நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக திரிசூலம், பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், கீழ்கட்டளை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதேபோல், மேற்கண்ட பகுதிகளில் இருந்து பல்லாவரம் பஸ் நிலையம், மார்க்கெட், மின்வாரிய அலுவலகம், வாரச்சந்தை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, வாகனம் பழுதாகிறது. பலர் வண்டியுடன் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சுரங்கப்பாதையை தவிர்த்து மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், நீண்டதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு மழைக் காலங்களிலும் இது தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallavaram , Rainwater ponding in tunnel near Pallavaram railway station
× RELATED செங்கல்பட்டில் அனைத்து கட்சி...