சென்னை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கடந்த ஜூன் 25ம் தேதி நடத்தியது. மாநிலம் முழுவதும் 197 மையங்களில் நடந்த எழுத்து தேர்வை 1 லட்சத்து 43 ஆயிரத்து 949 ஆண்கள், 43 ஆயிரத்து 949 பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 213 பேர் எழுதினர். சென்னையில் மட்டும் 7 ஆயிரத்து 80 ஆண்கள், 1,506 பெண்கள் என 8 ஆயிரத்து 586 பேர் தேர்வு எழுதினர்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வுக்கான அறிவிப்பு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானங்களில் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி சென்னை மண்டலத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது.
அதைதொடர்ந்து 444 உதவி ஆய்வாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. ஆண்களுக்கு 1,000 மீட்டரும், பெண்களுக்கு 1,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு ஏறுதல் போன்ற போட்டிகள் நடைபெற இருக்கிறது.