திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மெல்கிராஜா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கா.மீராகண்ணன், வரவேற்றார் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஜார்ஜ், கே.ஜெயசங்கர், க.முனுசாமி, ரா.ஸ்ரீராம் காந்தி, டி.ஜெ.லீல்பிரசாத், பி.இ.சோமசேகரன், கி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சீ.காந்திமதிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் அ.சந்தானம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.மணிகண்டன், ஓய்வு பெற்ற அலுவலக சங்கத்தின் மாவட்ட தலைவர் கோ.இளங்கோவன், ரா.பாண்டுரங்கன், பா.ஜெகன்நாதன், ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் ஊரக மாவட்ட பொருளாளர் எம்.மகேந்திரன் நன்றி கூறினார். இவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள் காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை தினம், இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்அப்,
காணொளி ஆய்வுகள் ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்புவழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் நலன்களையும் நிர்வாக நலன்களையும் கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.