கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்களின் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால் நாட்டை விட்டு வெளியேறி அதிபர் பதவியை ராஜினமா செய்த கோத்தபய, மனைவியுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டலில் தற்போது வசித்து வருகிறார். அவர், இன்று அல்லது நாளை இலங்கை திரும்ப திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அசாதாரண சூழல் நிலவுவதால், அவருடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்தின்படி, நாடு திரும்பும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் குழு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே அரசுக்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தை சேர்ந்த முதலிகே வசந்த குமார, ஹஷான் ஜீவந்த மற்றும் பௌத்த பிக்கு கல்வெவ சிறிதம்ம ஆகிய மூன்று மாணவர்களை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் இருப்பது போல் இருக்கிறது
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ள கோத்தபயவை, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதனால், ஓட்டலில் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவர், ‘சொந்த நாட்டுக்கும் போக முடியவில்லை. அறையை விட்டும் வெளியே போக முடியவில்லை. சிறையில் இருப்பது போல் இருக்கிறது,’ என புலம்பி வருகிறார்.