பாட்னா: பீகார் அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளவர் முகமது இஸ்ரேல் மன்சூரி. இவருக்கு கயா மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் கயாவில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணுபாத் கோயிலில் முதல்வர் நிதிஷ் குமார் தரிசனம் செய்தார். அப்போது, அவருடன் இஸ்லாமியரான அமைச்சர் முகமது இஸ்ரேல் மன்சூரியும் சென்றார்.
இதற்கு பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த கோயிலில் மாற்று மத நம்பிக்கை கொண்டவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் நிதிஷ் இஸ்லாமிய அமைச்சரவை அழைத்து சென்றுள்ளார். இதற்காக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரால் மெக்காவில் கால் வைக்க முடியுமா? இந்துக்கள் மட்டும் ஏன் எப்போதும் சகிப்புத்தன்மை என்ற பெயரில் தங்களின் மத உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும்? முதல்வர் நிதிஷ் மன்னிப்பு கேட்க மறுத்தால், பாஜ போராட்டம் நடத்தும்,’ என்று தெரிவித்தார்.