புதுடெல்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் திகார் சிறையில் ள்ள சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியை ஒருவாரத்தில் மண்டோலி சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, சிறையில் இருந்தபடி தொழிலதிபர்களை மிரட்டி ரூ.200 கோடி சுருட்டியது என பல்வேறு மோசடி வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர்.
இவரும், இவரது மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக இவரது மனைவியும், நடிகையுமான லீனா பால் இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வேறு சிறைக்கு மாற்றக் கோரி சுகேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஆர்.பட் மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, அடுத்த ஒரு வாரத்தில் சுகேஷ் மற்றும் அவரது மனைவியை டெல்லியின் மண்டோலி சிறைக்கு மாற்றுமாறு நேற்று உத்தரவிட்டனர்.