ஐதராபாத்: பாஜ முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தது கடும் சர்ச்சையானது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி ஐதராபாத்தில் பிரபல நகைச்சுவையாளர் முனாபர் பரூக்கி, நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தினார். இதில் ராமர், சீதையை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ எம்எல்ஏ ராஜா சிங் நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோவில், ‘முனாபர் பரூக்கியையும், அவரது தாயாரையும், முகமது நபிகளையும் இழிவாக பேசி உள்ளார்.
இந்த வீடியோ வைரலானதால், பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார் தரப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜா சிங்கை நேற்று கைது செய்தனர். இதையடுத்து, ராஜா சிங்கை பாஜ மேலிடம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே, எம்எல்ஏ ராஜா சிங்கை, நீதிமன்றத்தி நேற்று ஆஜர்படுத்தி, சஞ்சல்குடா சிறையில் போலீசார் அடைத்தனர்.
முதல்வர் மகள் வீடு முற்றுகை
டெல்லியில் நடந்த மதுபான ஊழல் பட்டியலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயரும் உள்ளது. அவர் தனது எம்எல்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்சில் உள்ள கவிதாவின் வீட்டை நேற்று முன்தினம் மாலை பாஜ.வினர் முற்றுகையிட முயன்றனர். பாஜ.வினருக்கு பதிலடி கொடுக்க ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும் அங்கு குவிந்தனர். அவர்களுக்கும் பாஜ.வினருக்கும் மோதல் ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
2ம் பாகம் வெளியிடுவேன்
போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது, எம்எல்ஏ ராஜா சிங் கூறுகையில், ‘‘யூடியூப்பில் இருந்து எனது வீடியோவை நீக்கிவிட்டனர். ஆனாலும், எனது வீடியோவின் 2ம் பாகத்தை வெளியிடுவேன். தர்மத்திற்காக நான் இதை செய்கிறேன். அதற்காக சாகவும் தயார். அந்த நபர் (முனாபர் பரூக்கி) காமெடி என்ற பெயரில் ராமரையும், சீதையும் இழிவுபடுத்துகிறார். அதற்கு அவரை அனுமதிக்காதீர்கள்,’’ என்றார்.