×

ஆத்தூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து: 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துக்க நிகழ்வுக்கு சென்ற ஆம்னி கார் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 1 குழந்தை உள்பட 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது 30ம் நாள் துக்க நிகழ்வுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 11 பேர் டீ குடிப்பதற்காக நேற்றிரவு 1 மணி அளவில் ஆம்னி கார் ஒன்றில் ஆத்தூர் துலுக்கனூர் புறவழிச்சாலை வழியாக சென்றனர்.

அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் ராஜேஷ், சரண்யா, சுகன்யா, ரம்யா, சந்தியா ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுகன்யாவின் 11 வயது மகள் தனுஸ்கா ஸ்ரீ, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு, தப்பியோடிய ஆம்னி பேருந்து ஓட்டுனரையும், போலீசார் தேடி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Omney ,Aathur , Omni bus collides with a car near Attur: 6 including 4 women, 1 child tragically killed
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது