ஐதராபாத்: தெலங்கானா வந்த அமித் ஷாவின் செருப்பை அம்மாநில பாஜ தலைவர் எடுத்து கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலங்கானா மாநிலம் முனுகோடு பகுதியில் பாஜ ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதற்காக தெலங்கானா சென்ற அமித்ஷா நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி மாதா கோயிலுக்கு சென்று வழிபட்டார். தரிசனத்தை முடித்துவிட்டு அவர் வெளியே வரும்போது, வெளியில் இருந்த அவருடைய செருப்பை அம்மாநில பாஜ தலைவர் பண்டி சஞ்சய் குமார் தனது கையால் எடுத்து கொடுக்க அதை அமித் ஷா காலில் போட்டு கொண்டு செல்கிறார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, தெலங்கானா அமைச்சரும், முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமராவ் ‘தெலங்கானா பெருமை’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாநில மக்கள் குஜராத்தின் அடிமைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலங்கானாவின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் எந்த முயற்சியையும் முறியடிப்போம்’ என்று கூறியுள்ளார். இதேபோல், சந்திரசேகர் ராவ் கட்சியை சேர்ந்தவர்கள் செருப்பு வீடியோவை பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பாஜ சார்பில் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.