பாட்னா: பீகாரில் ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்துவதற்கு எதிராக தேசிய கொடியுடன் போராடிய இளைஞரை கூடுதல் மாவட்ட கலெக்டர் லத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் ஆசிரியர் பணி நியமனம் தாமதம் செய்வதற்கு எதிராக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காவல்துறையினருடன் பாட்னா கூடுதல் மாவட்ட கலெக்டர் கே.கே. சிங் சென்றுள்ளார்.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியும் போராட்டத்தை தொடர்ந்ததால், தடியடி நடத்தவும், தண்ணீர் பீய்ச்சி கூட்டத்தை கலைக்கவும் கலெக்டர், காவல்துறைக்கு உத்தரவிட்டார். அப்போது, ஒரு இளைஞர் தேசியக் கொடியுடன் சாலையில் படுத்து போராட்டம் நடத்தியதைப் பார்த்து ஆத்திரமடைந்த கூடுதல் கலெக்டர் கே.கே.சிங், லத்தியால் அந்த இளைஞர் கொடூரமாக தாக்கினார். படுகாயத்துடன் மயங்கிய அந்த இளைஞர்கள் மற்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், மாவட்ட கலெக்டர், உடனடியாக விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உறுதி அளித்துள்ளார்.