ஈரோடு: போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி தனது மகளை மற்றொரு பெண் திருமணம்
செய்து கொண்டதாக ஈரோடு போலீசில் பெற்றோர் புகார் மனு அளித்தனர். ஈரோடு
மாவட்டம், அந்தியூர் கெட்டிசமுத்திரத்தை சேர்ந்த மகேந்திரன் (40),
குடும்பத்தினருடன் வந்து நேற்று ஈரோடு ஏடிஎஸ்பி பாலமுருகனிடம் புகார் மனு
அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.
எனது மூத்த மகளுக்கு 19 வயதாகிறது. 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில்
இருந்து வந்தார். அவருக்கு வரும் செப்டம்பர் 8ம் தேதி திருமணம் செய்ய
நிச்சயித்திருந்தோம். இந்நிலையில் கடந்த 18ம் தேதி அதிகாலை வீட்டைவிட்டு
வெளியேறியவர் மீண்டும் திரும்பவில்லை.
அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில்
புகார் அளித்தேன். அன்றைய தினமே பவானி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் என் மகள்
இருப்பதாக தகவல் வந்தது. அங்கு சென்றபோது, என் வீட்டில் வசிக்கும் 25 வயது
பெண்ணை எனது மகள் (பெண்ணும்-பெண்ணும்) திருமணம் செய்து கொண்டது தெரிந்து
அதிர்ச்சி அடைந்தேன். என் மகளை வீட்டுக்கு அழைத்தேன். ஆனால் வர மறுத்து
விட்டாள். என் மகள் திருமணம் செய்ததாக கூறப்படும் பெண் போதை பழக்கத்திற்கு
அடிமையானவர். என் மகளையும் மூளைச்சலவை செய்து கஞ்சா, போதை மாத்திரை, ஊசி
பழக்கத்துக்கு கட்டாயப்படுத்தி கடந்த ஓராண்டாக தீய செயலுக்கு
உட்படுத்தியுள்ளது தற்போதுதான் தெரியவந்தது. என் மகளை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.