சென்னை: தமிழகம் நெல் சாகுபடியில் புதிய சாதனை படைத்துள்ளது தமிழக அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் காவிரி டெல்டா விவசாயத்திற்காக நீர் திறக்கப்படுகிறது. அதனால் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக குருவை மற்றும் சம்பா சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச நெல் உற்பத்தியாக 1.22 கோடி மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது.
உரிய காலத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதால் நெல் சாகுபடி பரப்பும் 22.5 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதும், ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள் உள்ளிட்டவை முறையாக தூர்வாரப்பட்டதும் தான் இந்த சாதனையை அடைய முடிந்ததற்கான காரணம் என்றும் அரசின் புள்ளி விவர அறிக்கை மேலும் தெரிவித்திருக்கிறது. அதாவது, 2000-01ம் ஆண்டில் அதிகபட்சமாக 20,80,010 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 1,11,60,711 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின்பு என்றும் இல்லாத வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசின் முறையான நடவடிக்கையால் 2021-22ம் ஆண்டில் 22,05470 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, 1,22,22,46 மெட்ரிக் டன் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.