இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அந்நாட்டு அரசு வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்நேரமும் கைது செய்யபடலாம் என்று கூறப்படுகிறது. இஸ்லாமாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான் நீதிபதி ஒருவரையும், காவல்துறையினரையும் மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நேற்று இரவு இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இஸ்லாமாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், பிடிஐ கட்சி தலைவர் இம்ரான் கான் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் காவல் துறையால் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். சமீபகாலமாக பாக்கிஸ்தான் ராணுவம் குறித்தும், காவல்துறை, நீதித்துறை, அரசமைப்புகள் குறித்தும் இம்ரான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதனால் பாகிஸ்தானில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான் கான் பேச்சை நேரலை செய்ய கூடாது என ஆணையிடுள்ளது. அவரது பேச்சுக்கள் மக்கள் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதால் தணிக்கை செய்தியாக ஒளிபரப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. தன் மீதான வழக்கு பதிவுக்கு பதிலளித்த இம்ரான் கான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு தனது பேச்சை மக்களை கேட்க விடாமல் தடுக்கிறது என்று குற்றம் சாட்டிருக்கிறார். பாசிசவாதிகளுக்கு எதிராக மக்கள் தங்கள் குரலை உயர்த்த வேண்டும் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.