×

கோபி கீழ்பவானி வாய்க்காலில் மகளை வீசி கொன்று தாய் தற்கொலை மரத்தை பிடித்து உயிர் தப்பிய மற்றொரு மகள்-குடும்பத்தகராறில் விபரீத முடிவு

கோபி :  குடும்பத்தகராறில் கோபி கீழ்பவானி வாய்க்காலில் மகளை வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். 12 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு சிறுமியின் உடலை கடத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் தீபக் (38). இவர், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி மகள் விஜயலட்சுமிக்கும் (32), இவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதிக்கு மதுநிஷா (12), தருணிகா (6) என்ற இரு மகள்கள். மதுநிஷா அரசூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பும், தருணிகா அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். தீபக் மற்றும் விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த விஜயலட்சுமி, ‘‘வாழப்பிடிக்க வில்லை. மகள்களை விட்டு செல்ல விருப்பம் இல்லை, மன்னிச்சுடுங்க’’ என்று காரப்பாடியில் உள்ள அவரது அண்ணன் ராமசாமிக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, மகள்கள் மதுநிஷா, தருணிகா இருவரையும் ஸ்கூட்டரில் அழைத்து சென்று குருமந்தூர் அருகே சுட்டிகல் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வீசி விட்டு அவரும் குதித்துவிட்டார்.

இந்நிலையில் நள்ளிரவில் எழுந்த தீபக் மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விஜயலட்சுமியின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்து உள்ளார். அதன்பின்பே, விஜயலட்சுமி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, விஜயலட்சுமியின் உறவினர்கள் தேடினர். அப்போது சுட்டிக்கல் மேட்டில் ஸ்கூட்டர் ஒன்று நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, உறவினர்கள் வாய்க்காலில் 3 பேரையும் தேடினர்.

சுமார் 3 கி.மீ தொலைவில் ஆயிபாளையம் என்ற இடத்தில் மரத்தை பிடித்துக்கொண்டு மதுநிஷா அழுது கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் மீட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கடத்தூர் போலீசார், நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் குதித்த விஜயலட்சுமி, தருணிகாவை தேடினர். இதில், சுமார் 20 கி.மீ தொலைவில் வேட்டக்காரன் கோயில் என்ற இடத்தில் விஜயலட்சுமி உடலை மீட்டனர். மற்றொரு மகள் தருணிகா உடலை தேடி வருகிறனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதே போன்று, கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தகராறில் 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு நல்லூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

இதில், 6 வயது சிறுவன், தந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு மகனின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை.இந்நிலையில், அதே போன்று குடும்ப தகராறு காரணமாக மகளை வாய்க்காலில் வீசி கொன்று தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Gopi: A mother committed suicide by throwing her daughter into the drain of Gopi Kilibawani due to a family dispute. A 12-year-old girl is alive
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை