கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் பாஷ்யம் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமான மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் இருப்பதால் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் நேற்று காலை இந்த தெருவில் மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி திடீரென்று அறுந்து சாலையில் விழுந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
அந்த நேரத்தில் அந்தப் பகுதி முழுவதும் மின்சார தடை ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்சார துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.