சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் நடந்த மாட்டு வண்டி போட்டியில் இலக்கை நோக்கி காளைகள் சீறி பாய்ந்தன. இதில் அவனியாபுரம், மறுகால்குறிச்சி, சண்முகபுரம் அணி காளைகள் முதலிடம் வென்றன.
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் முறம்படி சுடலை தளவாய் மாடசுவாமி கோயில் கொடை விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. பெரிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகளும், சிறிய மாட்டு வண்டி போட்டியில் 30 வண்டிகளும் பங்கேற்றன. சிறிய வண்டி போட்டி இரு பிரிவாக நடத்தப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி போட்டியானது பன்னம்பாறையில் துவங்கி மெஞ்ஞானபுரம் வரை 7 கி.மீ. தூரம் சென்று வந்தது. இதேபோல் சிறிய வண்டி போட்டி பன்னம்பாறையில் துவங்கி நங்கைமொழி வரை 5.கி.மீ தூரம் சென்று வந்தது. போட்டியில் மாட்டு வண்டி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பெரிய மாட்டு வண்டி போட்டியை ரேக்ளா பந்தய சங்க மாநில முன்னாள் தலைவர் மோகன் சாமிக்குமார் துவக்கிவைத்தார். சிறிய மாட்டு வண்டி போட்டியை ஊராட்சி தலைவர் அழகேசன் துவக்கிவைத்தார்.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் அவனியாபுரம் மோகன்சாமிக்குமார் காளைகள் முதலிடமும், சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் காளைகள் 2ம் இடமும், நாலாதுளா உதயம் துரைப்பாண்டியன் காளைகள் 3ம் இடமும், வேலன்குளம் கண்ணன் காளைகள் 4வதுஇடமும், சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் காளைகள் 5ம் இடமும் பெற்றன.
சிறிய மாட்டு வண்டி போட்டி இரு பிரிவாக நடந்தது. முதல் பரிசு மறுகால்குறிச்சி சுப்பம்மாள், சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் காளைகளும், 2ம் பரிசு வள்ளியூர் அண்டி, மிளகுபுரம் மூக்கையா காளைகளும், 3ம் பரிசு மறுகால்குறிச்சி சுப்பம்மாள், வேலன்குளம் கண்ணன் காளைகள், 4ம் பரிசு வி.எம் சத்திரம் பாலமாதேஷ் காளைகளும், பொன்ராணி விட்டிலாபுரம், குமார் பாண்டியன் செய்துங்கநல்லூர் காளைகள் பெற்றனர்.
பின்னர் முதல் பரிசு பெற்ற அவனியாபுரம் காளை உரிமையாளருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கிய ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையை வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். வெற்றி கோப்பையை நெல்லை மாநகராட்சி துணை மேயர் கேஆர் ராஜூ வழங்கினார். 2ம் பரிசு பெற்ற மெடிக்கல் விஜயகுமார் காளைகளுக்கு ஊராட்சி தலைவர் அழகேசன், ரூ.40ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கினார். தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகள் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அதிமுக அவைத் தலைவர் பரமசிவபாண்டியன், நகர காங்கிரஸ் துணைத் தலைவர் கதிர்வேல். மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல்முருகன், வியாபாரிகள் சங்கத் தலைவர் சசிகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.