சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகை கடன் வாங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு கிளையில் மேலாளராக பணிபுரியும் முருகன் என்பவர், கடந்த 13ம் தேதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, லாக்கரில் இருந்த 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார், முக்கிய குற்றவாளியான முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான பாலாஜி, சந்தோஷ், செந்தில்குமரன், சூரியபிரகாஷ் மற்றும் திருட்டு நகைகளை தனது வீட்டில் பதுக்கிய காவல் ஆய்வாளர் அமல்ராஜ் ஆகியோரை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகளை மீட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவத்சவா (33) என்பவரை, கோயம்புத்தூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து, நேற்று அதிகாலை அரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், கொள்ளையடித்த நகைகளை உருக்குவதற்காக, இவர் மிஷின் வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 63 கிராம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய இவரது கூட்டாளி ஸ்ரீராம் (30) என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.