சென்னை: பிரான்ஸ் நாட்டுக்கு தம்பியை வழியனுப்ப சென்னை விமான நிலையம் வந்த அக்கா திடீரென மரணமடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தை சேர்ந்தவர் சுப்ரியா (35). இவரது தம்பி வெங்கட் ராஜேஷ். சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு பிரான்சில் வேலை கிடைத்துள்ளது. ஏர்பிரான்ஸ் விமானத்தில் செல்வதற்காக நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவரை வழியனுப்ப சகோதரி சுப்ரியா, அவரது கணவர் கிரண்குமார் வந்திருந்தனர். அக்காவிடம் பிரியா விடை பெற்று விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றார் வெங்கட் ராஜேஷ். அப்போது சுப்பிரியா திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வெங்கட் ராஜேஷ், அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தார். விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுப்ரியாவை அழைத்துச்சென்றனர். பரிசோதனையில், மாரடைப்பால் சுப்ரியா உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டதும் வெங்கட் ராஜேஷ், கிரண்குமார் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.