×

'மீண்டும் ஒற்றுமையாக செயல்படுவோம்'அதிமுகவில் இணைந்து செயல்பட சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை: டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, இன்று தேனி மாவட்டத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். 3 முறை முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர்.

உயிரோடு இருந்தவரையில் யாராலும் வெல்ல முடியாத முதலமைச்சராக எம்ஜிஆர் பதவி வகித்தார். 30 ஆண்டு காலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டார். 17 லட்சம் உறுப்பினர்களை 1.30 கோடி உறுப்பினர்களாக அதிகரிக்க செய்தவர் ஜெயலலிதா. எதிர்க்கட்சிகளின் சதிவலைகளை முறியடித்து அதிமுகவை மாபெரும் இயக்கமாக செயலலிதா மாற்றிக்காட்டினார். தமிழ்நாட்டில் 16 ஆண்டுகாலம் முதலமைச்சராக பதவி வகித்து, இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஜெயலலிதா ஆட்சி புரிந்தார்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. மீண்டும் தமிழகத்தில் ஆளும் பொறுப்பிற்கு ஏற்ப, கழகம் ஒன்றுபட வேண்டும்; ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கசப்புகளை மறந்து, அனைவரும் ஒன்றுபட்டு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.

அதிமுகவில் இரட்டைத் தலைமையை என்பதெல்லாம் பிரச்சனையில்லை; கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். எடப்பாடி பழனிசாமியை அன்புச் சகோதரர் என பலமுறை கூறி ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர்; அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது. கூட்டுத்தலைமை வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமியோடு பணியாற்றி வந்தோம். 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு முழு ஆதரவு தந்தோம். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிகளுக்கு உரிய எதிர்க்கட்சியாக மக்கள் விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவினர் உறுதியாக நின்று செயல்பட வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் என யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து அதிமுக செயல்படவேண்டும் இவ்வாறு கூறினார்.


Tags : Sasigala ,DTV ,Dinakaran ,Thinakaran ,Bannerselvam , O. Panneerselvam calls on AIADMK to 'work together again' Sasikala, TTV Dhinakaran
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி