சென்னை: சென்னை வடபழனி ஓசோன் கேபிடல் நிதிநிறுவன கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஓசோன் நிதி நிறுவனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் தப்பியோட முயன்ற கொள்ளையர்களில் ஒருவரான இக்பால் சையத் என்பவரை காவல் நிலையத்தில் நிறுவன ஊழியர்களே ஒப்படைத்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வடபழனியில் உள்ள ஓசோன் கேபிடல் நிதிநிறுவனத்தில் 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கத்தி முனையில் 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
இதுதொடர்பாக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கொள்ளை சம்பவம் நடைபெற்ற சமயத்தில், தப்பியோடிய கொள்ளையர்களின் ஒருவரான இக்பால் சையது துரியாஸ் என்பவரை வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களே விரட்டி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படடைத்தனர். இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு நபரான கிஷோர் என்பவரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் கொள்ளை தொடர்பான தொடர் விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 5 நபர்கள் பெங்களூரு, திருச்சி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், தனிப்படை போலீசார் அங்கும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.