சென்னை: தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை யால் சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் சென்றனர். கூட்ட நெரிசல் காரணமாக அரசு பேருந்துகளில் செல்ல முடியாதவர்கள், ஆம்னி பேருந்துகளில் சென்றனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து, போக்குவரத்துத் துறை சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆம்னி பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து செல்லும் வழித்தடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஆக.12 முதல் 16ம் தேதி காலை வரை தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. அதில் அதிக கட்டணம் வசூலித்த 4 பேருந்துகள் பிடிபட்டது. 953 பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த 97 பேருந்துகள் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் ரூ.65,800 பயணிகளிடம் திருப்பி வழங்கப்பட்டது. ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.