சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பில்கிஸ் பானு வல்லுறவு வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து, குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு சென்ற மேல் முறையீடுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் நாட்டின் சுதந்திர தின பவள விழாவையொட்டி 11 கொடுங்குற்றவாளிகளையும் குஜராத் மாநில அரசு விடுதலை செய்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டிருக்கிறது. குஜராத் மாநில அரசின் செயல் நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும். கொடுங்குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குஜராத் அரசின் இக்கொடுஞ்செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு தங்களது கண்டன குரலை எழுப்பிட முன் வரவேண்டும்.